சிங்கம்புணரியில் வசிக்கும் விமல், பாண்டி முனி என்ற காளை மாட்டை பாசத்துடன் வளர்க்கிறார். அவரது தந்தை ‘ஆடுகளம் நரேன்’, வட மஞ்சுவிரட்டு போட்டியில் தோல்வியையே சந்திக்காத நட்டி நடராஜின் காளைக்கு போட்டியாக பாண்டி முனியை களத்தில் இறக்குகிறார். இதனால் தோல்வியடைந்து அவமானப்படும் நட்டி நட்ராஜ், விமலையும் மற்றும் அவரது குடும்பத்தையும் பழிவாங்க புறப்படுகிறார். அது நடந்ததா என்பது மீதி கதை.
காளைக்காக உருகும் விமல், சனஸ்கா ஸ்ரீயின் காதலுக்கு ஏங்குவது சுவாரஸ்யம். சண்டைக்காட்சிகளில் இறங்கி அடித்திருக்கிறார். சனஸ்கா ஸ்ரீ இயல்பாக நடித்துள்ளார். வில்லனாக நட்டி நட்ராஜ் அசத்த, காமெடியை தாண்டி முனீஷ்காந்த் குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார். பாலசரவணன் இருந்தும் காமெடிக்கு பஞ்சம்.
‘ஆடுகளம்’ நரேன், இந்துமதி மணிகண்டன், மதுசூதன ராவ், தீபா சங்கர் ஆகியோர் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வட மஞ்சுவிரட்டு போட்டியை பிரசன்னா எஸ். குமார் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கூடுதல் பலம். வழக்கமான கதையை, புதுமைகள் எதுவும் இல்லாமல், வழக்கமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் கேந்திரன்.வி.
