சென்னை: கடந்த 25 வருடங்களாக இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வந்த ‘பிரஜாபதி’ என்ற மேடை நாடகம், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. ஏபிஎஃப் புரொடக்ஷன் ஹவுஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னிலையில் நடந்தது. மேடை நாடகத்தை எழுதி அரங்கேற்றிய முனைவர் பி.ரூபர்ட் ரகுநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
அவர் கூறியதாவது: இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை படம் சொல்கிறது. இது மக்களுக்கான படம் என்பதால், கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்படுகிறது. இதில் நடிப்பவர்கள், திரைத்துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முறை நடிகர், நடிகைகள் கிடையாது. அவர்கள் நாடகத்தில் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வந்த கலைஞர்கள். தியாக உணர்வுடனும், முழு அர்ப்பணிப்புடனும் இந்த படைப்பில் பங்கேற்றுள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் விரைவில் திரைக்கு வருகிறது.
