இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைகிறார்கள்

துபாயில் தற்போது துபாய் எக்ஸ்போ என்ற கண்காட்சி நடந்து வருகிறது. இதில் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சி முடிந்ததும்  துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு சென்றார் இளையராஜா. அவருக்கு தனது ஸ்டூடியோ முழுவதையும் சுற்றிக்காட்டிய ஏ.ஆர்.ரகுமான், அவருடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்து அதனை தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

அதனுடன் "மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என குறிப்பிட்.டிருந்தார்.  இதை தொடர்ந்து இளையராஜா ரகுமானின் கோரிக்கையை ஏற்பதாகவும், விரைவில் அவர் ஸ்டூடியோவில் பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: