மும்பை: ஷாருக்கான் மகன் கைதுக்கு மத்தியில், மது குடிப்பதால் அழிவுதான் ஏற்படுகிறது என்று போதை பழக்கத்தில் இருந்து மீண்ட நடிகை பூஜா பட் கருத்து தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பின்னர், பாலிவுட்டுக்கும் போதைப் பொருளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இருப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டாக மது குடிப்பதில்லை என்று சமீபத்தில் தெரிவித்த பாலிவுட் நடிகை பூஜா பட், தற்போது மது குடிப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்து புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஆல்கஹால் (மது) என்பது ஒரு மருந்து. ஆனால், இதனை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய பட்டியலில் வகைப்படுத்தப்படவில்லை. மதுவை குடிப்பதால் அழிவுதான் ஏற்படுகிறது. சாலை விபத்துக்கள், வீட்டு வன்முறை, கடனாளியாகுதல், குடும்பங்கள் பாதிப்பு, குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்பு, உயிரிழப்பு ஆகியன ஏற்படுகின்றன.