ஆரணி: ஆரணி மற்றும் சம்புவராயநல்லூர் கிராமத்தில் சித்திரை தேர் திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஆரணி கோட்டை அருகில் அறம்வளர்த்த நாயகி சமேத கயிலாயநாதர் கோயில் 43ம் ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.
இதையடுத்து, நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் விநாயகர் திருவீதி உலா, அன்னவாகனம், சூரியபிரபை, நாகவாகனம், அதிகாரநத்தி, யானை வாகனம், திருக்கல்யாணம் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருத்தேரில் வைக்கப்பட்டு ஆரணி முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது.