திருமயம்: அரிமளம், ஓணாங்குடியில் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற பால்குடம், காவடி எடுப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஓணாங்குடி முத்துமாரியம்மன், வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 24ம் தேதி காப்பு கட்டப்பட்டு நேற்று முதல் திருவிழா தொடங்கிய நிலையில் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் நோக்கில் பால்குடம், மயில் காவடி, பறவை காவடி, அக்னி காவடி எடுத்து வழிபட்டனர்.