சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாத சுவாமி தையல்நாயகி அம்பாள் உடனாகிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவக்கிரங்களில் ஒன்றான செவ்வாய் தனிசன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பாள், விநாயகர் சண்டிக்கேஸ்வரர், செல்வமுத்துக்குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேரை கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு வீதிகளிலும், வலம் வந்தது நிலையை அடைந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.