ஜெயங்கொண்டம்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று தேர்வீதி உலா நடைபெற்றது. கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழா கடந்த 10ம் தேதி முதல் இன்று வரை நடைபெறுகிறது. தினசரி யாக பூஜைகள், இரவில் பாராயணம் நடைபெற்றது.
16, 17ம் தேதியன்று யாக பூஜைகளும் திருக்கல்யாணமும் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. விழாவில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் கோமகன், அன்னாபிஷேக கமிட்டி நிர்வாகி ஜடாதரன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று மாசிமக சொர்ணவத்ஸவ தீர்த்தவாரி கலசங்கள் அபிஷேகம் ஆகியவை நடைபெறும். விழாவின் இறுதியாக இன்று இரவு கொடியிறக்கம் நடைபெற உள்ளது.
நாளை (20ம் தேதி) அம்பாள், சண்டிகேஸ்வரர், உற்சவம் யதாஸ்தான பிரவேசம் நடைபெற உள்ளது. இவ்விழா கடந்த 150 ஆண்டுகளாக கோயிலில் கொடிமரம் இல்லாததால் நடைபெறாமல் இருந்தது. வெளிநாட்டில் இருந்து கடந்த வருடம் கொடி மரம் வைத்து முதலாவதாக பிரமோற்சவம் நடைபெற்றது. இது இரண்டாம் முறையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சோழீஸ்வரர் ஸ்ரீபாத வழிபாடு குழுமம், காஞ்சிகாமகோடி அன்னாபிஷேக கமிட்டி, மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.