வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒருங்கிணைந்த மேல்முறையீடு மனு

புதுடெல்லி: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒருங்கிணைந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, கடந்தாண்டு பிப்ரவரி 26ம் தேதி தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி 35க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்தது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, பட்டாளி மக்கள் கட்சிவழக்கறிஞர் பாலு, எம்.எல்.ஏ வேல்முருகன், சி.என்.ராஜன் உட்பட 13 பேர் செய்த மேல்முறையீட்டு மனுக்களையும், அதேப்போன்று  இந்த வழக்கில் எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என பாலமுரளி, வி.வி.சாமிநாதன், அனைத்து மறவர் அமைப்பினர், விஜயகுமார், நடிகர் கருணாஸ் ஆகியோர் உட்பட தாக்கல் செய்த 13 கேவியட் மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. மேலும், இரு தரப்பினரும் அனைத்து கருத்துகளையும் எழுத்துப்பூர்வ வாதங்கங்களாக தாக்கல் செய்யும்படி கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கானது வரும் 15ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் குமணன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘இந்த வழக்கில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, 4 மனுதாரர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். தற்போது, வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தை பலர் அணுகி உள்ளனர். இவர்களுக்கு தனித்தனியாக மேல்முறையீடு செய்வது நேரத்தை வீணாக்கும். அதனால், வழக்கையும் விரைவாக முடிக்க முடியாது. இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் திடீரென இடைக்கால மனுவை தாக்கல் செய்கின்றனர். அதனால், தற்போது தமிழக அரசு தரப்பில் புதியதாக ஒருங்கிணைந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம்,’ என தெரிவித்துள்ளார்….

The post வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒருங்கிணைந்த மேல்முறையீடு மனு appeared first on Dinakaran.

Related Stories: