செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஓட்டேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் பழமை வாய்ந்த தேவி, பூதேவி, சமேத பெருமாள் கோயில் உள்ளது. இந்தகோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், வெங்கடேச பெருமாள் கோயிலில் உள்ள மஹா விஷ்ணு, நரசிம்மர், ஹயகிரிவர், கருடன், ஆஞ்சநேயர் மற்றும் நவகிரக சன்னதிகளுக்கு கோபூஜை, விஸ்வரூபம், சதுர்ஸ்தான அர்ச்சனம், துவார கும்ப மண்டல பிம்ப அக்னி ஆராதனை, சாந்தி ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு யாக கலசங்களுடன் புறப்பட்டு பெருமாளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இதில், திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணா என்ற குணசேகரன் கலந்துகொண்டு மகா கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் தேவேந்திரன், ஊனைமாஞ்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜேவிஎஸ் ரங்கநாதன், ஓட்டேரி வார்டு கவுன்சிலர் ஜெகன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வெங்கடேச பெருமாள் தரிசனம் பெற்றனர். இதில், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
The post ஓட்டேரியில் பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பங்கேற்பு appeared first on Dinakaran.
