செங்கல்பட்டில் வரும் 19ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு, டிச.16: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் டிசம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி காலை நடைபெற உள்ளது. இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளார்கள். முகாமில் பங்கேற்கும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் மாபெரும் மற்றும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அனைத்து தகவல்களை பெறலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ / பாராமெடிக்கல் போன்ற கல்வித்தகுதி உடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 40வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 19.12.2025 அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு (Employment registration card) ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: