மெட்ரோ ரயில் பாதைக்காக அயனாவரம்-பெரம்பூர் இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: அதிகாரிகள் தகவல்

சென்னை: கல்வராயன் இயந்திரம் மூலம் அயனாவரம் – பெரம்பூர் இடையேயான 867 மீட்டர் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை நிதியுதவி வழங்குகின்றன.

வழித்தடம் 3ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டியு -01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. சுரங்கம் தோண்டும் இயந்திரம் கல்வராயன் வழித்தடம் 3ல் அயனாவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 867 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு 13ம் தேதி பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.

அயனாவரம் மற்றும் பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும், இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரமான கல்வராயன், பெரம்பூர் ரயில்வே நிலையத்தின் பாதைகள், நிலையங்களை மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து பெரும் சவால்களையும், 32க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர்கொண்டு, மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மெட்ரோ ரயில் பாதைக்காக அயனாவரம்-பெரம்பூர் இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: