விழுப்புரம் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய சேலம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

விழுப்புரம், மே 15: விழுப்புரம் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய சேலம் வாலிபருக்கு 10ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சேலம் மாவட்டம் தேவியார்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் குமரேசன்(36). இவரும், விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கதக்க பெண்ணும் கடந்த 2016ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கோலியனூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று இளம்பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார்.

இதில் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது குமரேசன் மறுப்பு தெரிவித்து மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் வன்புணர்ச்சி, மோசடி உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து குமரேசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார். அதில் குற்றம் சாட்டப்பட்ட குமரேசனுக்கு பாலியல் வன்புணர்ச்சி பிரிவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய பிரிவில் 6 மாதமும், ரூ.15,000 அபராதம் அளித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட குமரேசன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post விழுப்புரம் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய சேலம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: