தொகுப்பு வீட்டின் சுவர் விழுந்து 3 பேர் படுகாயம்

 

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செஞ்சிகுப்பம் பகுதியில் கழைக் கூத்தாடி சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு, அதில் 16 தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொகுப்பு வீடு கட்டப்பட்டு வரும் இடத்தில் கட்டிடத்தின் மேல் நின்று பிரபு (48), அவரது மகன் ராஜேஷ் (18), உறவினர் பிரசாந்த் (18) ஆகிய 3 பேரும் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென முன்பகுதி சிலாப் உடைந்து கீழே விழுந்ததில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனையறிந்த அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் சார்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து தரமான வீடுகளாக கட்டித்தர வேண்டும் என கழை கூத்தாடி சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post தொகுப்பு வீட்டின் சுவர் விழுந்து 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: