பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் நிர்வாகி சரண்யா கொலை வழக்கில் 2வது கணவருக்கு வலைவீச்சு

தஞ்சை: பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் நிர்வாகி சரண்யா கொலை வழக்கில் 2ஆவது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சரண்யா கொலை வழக்கில் சரணடைந்த மூன்று பேர், மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியை சேர்ந்தவர் சரண்யா(35). இவரது முதல் கணவர் மதுரையை சேர்ந்த சண்முகசுந்தரம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2021ம் ஆண்டு சண்முகசுந்தரம் இறந்து விட்டதால் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா கழுகப்புலிக்காட்டை சேர்ந்த பாலன்(45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது உதயசூரியபுரத்தில் வாடகை வீட்டில் பாலனுடன் சரண்யா வசித்து வந்தார்.

உதயசூரியபுரம் கடைத்தெருவில் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடையை பாலன், சரண்யா நடத்தி வந்தனர். நேற்றிரவு கடையை பூட்டி விட்டு பாலன், சரண்யா வீட்டுக்கு புறப்பட்டனர். சரண்யாவின் மகன்களுடன் இரு சக்கர வாகனத்தில் பாலன் வீட்டுக்குசென்றார். கடையில் இருந்து வீடு ஒரு கிமீ தொலைவே இருப்பதால் சரண்யா நடந்து சென்றார். வீட்டுக்கு அருகில் சந்து பகுதியில் சரண்யா நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து சரண்யாவை கழுத்து மற்றும் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சரண்யா தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரண்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து சரண்யாவை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பாலனின் முதல் தாரத்தின் மகனான கபிலன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சரண்யாவை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்த பின்னர் கபிலன் மற்றும் அவரது நண்பர்கள் என மூவரும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், புதிதாக வந்துள்ள சட்டத்தின்படி கொலை நடைபெற்ற மாவட்டத்திற்குள்ளேயே சரணடைய வேண்டும். எனவே இங்கு சரணடைய முடியாது என நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதையடுத்து வழக்கறிஞர்கள் மூவரையும் அருகிலுள்ள அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியாக சரண்யாவின் 2வது கணவர் பாலன் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

உதயசூரியபுரத்தில் ரூ.43 லட்சம் மதிப்பில் ஒரு இடத்தை தனது முதல் தாரத்தின் மகன் கபிலன் பெயரில் பாலன் வாங்கியுள்ளார். இதில் சரண்யா-பாலன் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலன், கபிலன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை வரவழைத்து திட்டமிட்டு சரண்யாவை வெட்டி கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான பாலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சரண்யா முதல் கணவருடன் மதுரையில் வசித்த போது, மதுரை மத்திய தொகுதி பாஜ மகளிரணி செயலாளராக இருந்துள்ளார். தற்போது பட்டுக்கோட்டை பாஜகவில் உள்ளார்.

The post பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் நிர்வாகி சரண்யா கொலை வழக்கில் 2வது கணவருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: