சித்திரை பரணியை முன்னிட்டு உத்தராபதீஸ்வரர் கோயிலில் தெருவடைத்தான் சப்பரம்

நாகப்பட்டினம், ஏப். 28: திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயிலில் சித்திரை பரணியை முன்னிட்டு தெருவடைத்தான் சப்பரம் நடந்தது. சப்பரத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பரணி பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பரணி பெருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. தெருவை அடைத்து கொண்டு சப்பரம் வருவதால், இந்த நிகழ்ச்சிக்கு தெருவடைத்தான் சப்பரம் என்று பெயர்.

சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், அன்னபட்சி வாகனத்தில் அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், மூஞ்சூரு வாகனத்தில் விநாயகரும், சிறிய ரிஷபவாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.

The post சித்திரை பரணியை முன்னிட்டு உத்தராபதீஸ்வரர் கோயிலில் தெருவடைத்தான் சப்பரம் appeared first on Dinakaran.

Related Stories: