1ம் வகுப்பு முதல் கட்டாய பாடம் இந்தி திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிராவில் போராட்டம்

மும்பை: 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழிப்பாடத்தை கட்டாயமாக்கியதை கண்டித்து மகாராஷ்டிராவில் போராட்டம் தொடங்கி உள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை, மகாராஷ்டிராவில் பாஜ அரசு செயல்படுத்தி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஊக்குவிக்கிறது. தற்போது ஆரம்ப கல்வியிலேயே இந்தியை கற்பிக்கும் விதமாக, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தியை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது. மராத்தி, ஆங்கிலம் தவிர 3வது மொழியாக இது இருக்கும் என தெரிவித்தது.

தமிழ்நாடு அரசு மும்மொழி கொள்கைக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தியது போல தற்போது மகாராஷ்டிராவிலும் இந்தி திணிப்புக்கு எதிரான குரல் வலுத்துள்ளது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்), காங்கிரஸ் போன்ற கட்சிகள் மகாராஷ்டிர அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தி திணிப்பை எதிர்த்து நேற்று எம்என்எஸ் கட்சியின் மாணவரணியினர் நவிமும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாஷியில் திரண்ட போராட்டக்காரர்கள், இந்தியை கட்டாயமாக்கிய அரசாணையின் நகல்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டின் நிலைப்பாடு தான் எங்களுடையதும். மகாராஷ்டிரா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் இந்தி திணிப்புக்கு எதிராக போராட ஒன்றுபட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போராட்டம் வலுத்த நிலையில், துணை முதல்வர் அஜித்பவார் நேற்று திடீர் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,’ பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினாலும் மகாராஷ்டிராவில் எப்போதும் மராத்திக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று கூறினார்.

The post 1ம் வகுப்பு முதல் கட்டாய பாடம் இந்தி திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிராவில் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: