தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு; உத்தபுரம் கோயிலில் திருவிழா நடத்தலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை ஏப். 18: உத்தபுரம் கோயிலில் திருவிழா நடத்தலாம் என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மதுரையைச் சேர்ந்தவர் பாண்டி. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் 2014ம் ஆண்டு வரை அமைதியான முறையில் திருவிழா நடைபெற்றது. 2015ல் சிலர் அங்குள்ள ஒரு மரத்தை வழிபட முயன்றதால் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த கோயில் வருவாய்த்துறையினரால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கோயிலில் அன்றாடம் செய்யக்கூடிய எந்த பூஜைகளும் செய்யப்படாமல் உள்ளது. எனவே, கோயில்களை திறக்கவும், தினசரி பூஜைகள் செய்யவும் அனுமதி வழங்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி, கோயிலை திறந்து, தினம் வழிபாடு, பூஜை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோயில் நிர்வாகம் தரப்பில், ‘‘திருவிழா நடத்தும்போது எந்த சமூகத்தினர் வந்தாலும் அவர்கள் வழிபாடு செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை. ஏற்கனவே வேறொரு சமூகத்தினர் நடத்திய திருவிழாவில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக திருவிழா நடத்தப்பட்டது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கூடாது’’ என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், திருவிழா நடத்தினால் சம்பந்தப்பட்ட பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, இதனை கருத்தில் கொண்டு திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், திருவிழா நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, திருவிழா நடத்துவது குறித்து எவ்வித தடையும் பிறப்பிக்க முடியாது. கோயில் திருவிழாவை வழக்கம் போல் நடத்திக் கொள்ளலாம். அங்குள்ள மரத்தில் இரு தரப்பினரும் ஆணி அடிக்கவோ, வழிபாடு செய்யவோ கூடாது. கோயில் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு; உத்தபுரம் கோயிலில் திருவிழா நடத்தலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: