ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: ஒடிசாவில் இருந்து சென்னைக்கு விரைவு ரயிலில் 15 கிலோ கஞ்சா கடத்திய திருச்சி இளைஞரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலைத்தின் 9வது நடைமேடைக்கு வந்தடைந்தது. இந்த ரயிலில் இறங்கி சென்ற பயணிகளை ரயில்வே போலீசார் கண்காணித்தபோது, ஒரு இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை பிடித்து, அவரது பைகளை சோதித்த போது, அதில் 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம். இதையடுத்து, அவரை பிடித்து, ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சியைச் சேர்ந்த சரண்ராஜ் (31) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்ததும், திருச்சிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: