வறுத்தெடுக்குது வெயில்… தப்பிக்க என்ன வழி..? கலெக்டர் சொல்றாரு கேளுங்க..!

நாகப்பட்டினம், ஏப். 12: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாகை மக்களின் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பயணங்களின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.எஸ்.ஆர். எலுமிச்சை ஜூஸ், இளநீர், வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்ஸி, பழைய சாதம் நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும்.

பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையுடன் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.

முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா? என உறுதிப்படுத்திக் கொள்ளவும். மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிர்க்கவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டிட போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதிய அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும்.

செல்லப்பிராணிகளை வெளியில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் மேற்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று விழும் தன்மையை பெறுகின்றன. எனவே கோடை முடியும்வரை எச்சரிக்கையாக இருப்பதுடன், கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்துக்கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்துவிட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வறுத்தெடுக்குது வெயில்… தப்பிக்க என்ன வழி..? கலெக்டர் சொல்றாரு கேளுங்க..! appeared first on Dinakaran.

Related Stories: