வேலாயுதம்பாளையம், ஏப். 12: கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோயில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டாரங்களில் உள்ள முருகன் கோயில்களில் முருகனுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் appeared first on Dinakaran.