அகில இந்திய அளவில் 14வது இடம் தஞ்சை மாநகராட்சிக்கு தமிழகத்தில் முதல் இடம்: விரைவில் ஒன்றிய அரசு விருது வழங்குகிறது

தஞ்சாவூர்: ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கீழ் 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியில் பொது இடங்களில் 255 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாநகரில் குடிநீர், பாதாள சாக்கடை உடைப்பு, கழிவுநீர், குப்பைகள் தேங்குதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே தீர்க்கப்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீர் இருப்பும் கண்காணிக்கப்பட்டு, தடையில்லாமல் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டு, அதன் மதிப்பீடுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி 2024-2025க்கான மதிப்பீடுகள் செய்யப்பட்டு கடந்த 9ம் தேதி முடிவுகள் வெளியானது. இதில் தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 14வது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் விரைவில் விருது வழங்கவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், கட்டுப்பாட்டு அறையிலுள்ள 1800 425 1100 என்கிற கட்டணமில்லா தொலைபேசி மூலமும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் மூலம் தினமும் சராசரியாக 300 அழைப்புகள் வருகின்றன. இதற்கு இரண்டு, மூன்று நாட்களில் தீர்வு காணப்படுகிறது. கடந்த ஓராண்டில் ஏறக்குறைய 11 ஆயிரம் அழைப்புகள் வந்ததில், 80 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாநகரில் குற்ற செயல்களும் குறைந்துள்ளன. தற்போது 255 கேமராக்கள் இயங்கி வருகின்றன என்றார்.

The post அகில இந்திய அளவில் 14வது இடம் தஞ்சை மாநகராட்சிக்கு தமிழகத்தில் முதல் இடம்: விரைவில் ஒன்றிய அரசு விருது வழங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: