ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஏழை குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சுஜன்புரா கிராமம் உள்ளது. இங்கு, காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் உள்ளது. இந்த அறக்கட்டளை நிர்வாகிகள், ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஏழை பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு விற்று வந்துள்ளனர்.
அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பி வந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு பிறகுதான் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அறக்கட்டளை அலுவலகத்தில் போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகளான காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி கூறுகையில், பெண்களை கடத்தி விற்கும் ஒரு கும்பல் பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஏழை குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்று விடுவார்கள்.
காயத்ரி, இந்த பெண்களை ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்று விடுவார். சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் ‘விலை’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயாரித்துள்ளனர். இதுபோன்று 1500 திருமணங்களை காயத்ரி நடத்தியுள்ளார். அவர் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்றார்.
The post ஏழை குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு விற்ற அவலம்: ராஜஸ்தானில் மோசடி கும்பல் அதிரடி கைது appeared first on Dinakaran.