நடிகர் சிவாஜிக்கு சொந்தமான அன்னை இல்லத்தில் எனக்கு உரிமையும், பங்கும் இல்லை: ஐகோர்ட்டில் ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்று ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ஜகஜால கில்லாடி பட தயாரிப்புக்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடன் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை திருப்பித் தரக் கோரிய வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அன்னை இல்லம் எனக்கு சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் எனக்கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, துஷ்யந்தின் தந்தை ராம்குமார் தரப்பில், அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது சம்பந்தமாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்னை இல்லத்தை எனது சகோதரர் நடிகர் பிரபுவுக்கு, எனது தந்தை சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளார். அந்த வீட்டின் மீது எனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை என்று ராம்குமார் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் பிரபு மற்றும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்கள் முடிவடையாததால் விசாரணையை 15ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post நடிகர் சிவாஜிக்கு சொந்தமான அன்னை இல்லத்தில் எனக்கு உரிமையும், பங்கும் இல்லை: ஐகோர்ட்டில் ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: