அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மறு விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ. 76 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதேப்போன்று அதே காலக்கட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவிக்கு எதிராக ரூ.44 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்து இந்த இரு வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் இருந்து அனைவரையும் கடந்த 2022ம் ஆண்டு விடுவித்திருந்தது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் விடுவிக்க வேண்டும் என்ற அமைச்சர்களின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என வில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கும் நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய உத்தரவுக்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அவரது மனைவி அதேப்போன்று கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவரது மனைவி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், இந்த விவகாரத்தில் வேறு சில வழக்குகளும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே விசாரணையை வேறு ஒரு தேதிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாகவும், மறு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை அதுவரையில் நீட்டிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டனர்.

The post அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மறு விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: