கடலூர், ஏப்.4: கடலூர் தொடர் வழிப்பறி கொள்ளையன் என்கவுன்டரை தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளியை நேற்று தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 லாரி டிரைவர்களை கத்தியால் தாக்கி 6 பேர் கும்பல் பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றது. அதேபோல் பெரியப்பட்டு அருகே மற்றொரு லாரி டிரைவரிடம் பணம் பறிக்க முயற்சி நடந்தது. பின்னர் கடலூர் எம்.புதூர் பகுதியில் நடந்து சென்ற விவசாயிடம் அதே கும்பல் செல்போனை பறித்தது.
அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். திருப்பாதிரிப்புலியூர் ஆய்வாளர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிய நிலையில் கொள்ளை கும்பல் தலைவனான புதுச்சேரி திலாசுபேட்டையைச் சேர்ந்த விஜய் என்ற மொட்டை விஜய் (19), கடலூர் எம்.புதூர் காசநோய் மருத்துவமனை அருகே உள்ள முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விஜியை பிடிக்க முயன்றபோது, திடீரென பாய்ந்து வந்து 2 காவலர்களை கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் ஆய்வாளர் சந்திரனை தாக்க முயன்றபோது தற்காப்புக்காக அவர் சுட்டதில் விஜய் உயிரிழந்தார். உயிரிழந்த விஜய்யின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளை கும்பல் தலைவனின் கூட்டாளிகளான ரேவந்த் குமார் (21), அன்பரசு (20), ரியாஸ் அகமது (22) மற்றும் 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆகாஷ் என்பவரை கைது செய்ய டிஎஸ்பி ரூபன்குமார் மற்றும் லாமேக், ராஜா, விஜிகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடலூர் அருகே எம்.புதூரில் உள்ள காசநோய் மருத்துவமனை அருகே ஆகாஷ் மறைந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், தனிப்படை போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுக்கியிருந்த அவரை பிடித்து கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே முண்டியம்பாக்கத்தில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள விஜய் உடலுக்கு 2வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரின் அதிரடி நடவடிக்கைகளால் கடலூர் மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் கொள்ளையர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக கடலூர் மாவட்ட எஸ்பியாக ஜெயக்குமார் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கைகால் முறிவு வைத்தியம், ெபாதுமக்கள் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை, என்கவுன்டர் உள்ளிட்டவற்றால் ரவுடிகள் மட்டுமின்றி அவர்களது உறவினர்களும் அச்சத்தில் உள்ளனர். இந்த மாவட்டங்களில் ரவுடிகளின் பட்டியல் கணக்கெடுப்பு துவங்கி உள்ளதால் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இருக்கும் என்பதால் ரவுடிகள் வெளி மாவட்டங்களுக்கு ஓட்டம் பிடிக்கத் தொடங்கி உள்ளனர். இருப்பினும் அவர்களின் வீடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
The post கடலூர் வழிப்பறி கொள்ளையன் என்கவுன்டரில் தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது: கதிகலக்கத்தில் விழுப்புரம், புதுச்சேரி ரவுடிகள் appeared first on Dinakaran.