மாமல்லபுரம், ஏப் 4: மாமல்லபுரம் அடுத்த, இளந்தோப்பு பக்கிங்காம் கால்வாய்க்கு அருகே மரங்கள், செடி-கொடிகள் காய்ந்து கருகி காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பக்கிங்காம் கால்வாய்க்கு அருகே காய்ந்து காணப்பட்ட புதரில் மரங்கள், செடி – கொடிகள் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. பின்னர், தீ மற்ற மரங்களுக்கும் மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் ஓடி வந்து, மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தீயணைப்பு அலுவலர் இன்பராஜ், முதன்மை தீயணைப்பாளர் வெங்கட கிருஷ்ணன், ரமேஷ் பாபு மற்றும் 5 வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால், அருகில் உள்ள மற்ற மரங்கள், செடி – கொடிகளுக்கு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. இதனால், அங்கு 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
The post மாமல்லபுரம் அருகே புதர் பகுதியில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.