75 வயதாகும் மூத்த தலைவர்களுக்கு ஓய்வு; பாஜவின் இரட்டை நிலைப்பாடு: அத்வானி, ஜோஷிக்கு ஒரு நியாயம்; மோடிக்கு பொருந்துமா?

வரும் செப்டம்பரில் மோடி ஓய்வு பெறப் போவதாக பேசப்படும் நிலையில் 75 வயதாகும் தலைவர்களை ஓரங்கட்டுவதில் பாஜ இரட்டை நிலைபாட்டை எடுப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அத்வானி, ஜோஷி, சுமித்திராவுக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மரபுப்படி ஒரு நபர் 75 வயதை கடந்து விட்டால், அவர் கட்சியின் மேலிட பொறுப்புகளில் அங்கம் வகிக்க முடியாது.

அதன்படி வரும் செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடிக்கு 75 வயது பூர்த்தி ஆகிவிடும். அதனால் தான் பிரதமர் மோடி வரும் செப்டம்பருடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா? என்ற அரசியல் விவாதங்கள் தொடங்கியுள்ளன. 2014ல் பிரதமரான பிறகு முதல்வர் மோடி கடந்த ஞாயிறன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றது, அங்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்து பேசியது பிரதமர் மோடி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது ஓய்வை அறிவிப்பார் என்ற செய்திகளுக்கு உரமூட்டியுள்ளது.

செப்டம்பரில் மோடி ஓய்வு பெறுவார். புதிய பிரதமராக மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆர்எஸ்எஸ்சால் தேர்வு செய்யப்படுவார் என்று கொளுத்தி போட்டுள்ளார் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத். ஆனால், மகாராஷ்டிரா மாநில பாஜ முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ‘2029 தேர்தலிலும் மோடி தான் பிரதமராக தொடர்வார்’ என்று குறிப்பிட்டார். பாஜவை பொறுத்தவரை பாஜவின் 75 வயது ஓய்வு என்பது ஆள் பார்த்து பின்பற்றப்படும் என்றும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பின்பற்றப்பட்டது என்றும், மற்றவர்களுக்கு பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய் (அப்போது வயது 90), எல்.கே.அத்வானி ( அப்போது வயது 87), முரளி மனோகர் ஜோஷி (அப்போது வயது 80) ஆகியோர் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அத்வானி (92), முரளி மனோகர் ஜோஷி (85), சுமித்ரா மகாஜன் (76) ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட அவர்களுக்கு நேரடி அரசியலில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. அதன் பின் கடந்த 2016ம் ஆண்டு ஜூலையில் ஒன்றிய அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்த போது அதே ஆண்டு ​​ஏப்ரல் மாதத்தில் 76 வயதை எட்டிய நஜ்மா ஹெப்துல்லாவை பிரதமர் மோடி அமைச்சரவையில் இருந்து வெளியேற்றினார். கடந்த 2017ல், மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், தனது அமைச்சரவையில் இருந்த மூத்த தலைவர்களான பாபுலால் கவுர் (87), சர்தாஜ் சிங் (77) ஆகியோரையும் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார்.

காரணம் மோடியின் அமைச்சரவையில் 75 வயதுக்கு மேலானவர்களுக்கு பதவி வழங்கப்படாது என்று கூறப்பட்டது. மேற்கண்ட விதிகளில் விதி விலக்காக அப்போது மூத்த அமைச்சராக இருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜவின் மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா (75) அமைச்சர் பதவியில் தொடர்ந்தார். இதற்கு காரணம் 2017ம் ஆண்டில் உத்தரபிரதேச மாநில பேரவை தேர்தல் நடந்ததால் அவரது பதவி தப்பியது. அதேபோல் 2021ல் நடந்த மக்களவை தேர்தலின் போது கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரனை அவரது 88வது வயதில் பாஜ நிறுத்தியது. அப்போது அவரின் வயது பொருட்படுத்தப்படவில்லை.

ஆனால் 75 வயதான பாஜவின் முக்கியத் தலைவர்கள் சிலர், கட்சியின் தேசிய தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் தங்களது அரசியல் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். அப்போதிருந்தே 75 வயதில் ஓய்வு குறித்த விவாதம் நடந்து வருகிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்ற முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்; அவருக்குப் பதிலாக அமித் ஷா அந்த தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.

அத்வானியை போன்றே முரளி மனோகர் ஜோஷியும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கான்பூரில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், இந்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார். மேற்கண்ட தலைவர்கள் 75 வயதை கடந்த நிலையில் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் தான் பாஜகவின் 75 வயது ஓய்வு திட்டம் என்பது வேண்டியவர், வேண்டாதவர் என்ற இரட்டை நிலைபாடு கொண்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

* நேருவின் சாதனையை முறியடிக்க திட்டம்?
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகவும் இருந்த ஜவஹர்லால் நேரு, கடந்த 1947 ஆகஸ்ட் 15 முதல் 1964 மே 27 வரை பிரதமர் பதவி வகித்தார். சுதந்திர இந்தியாவின் தொடக்கத்திலிருந்து அவர் மறைவு வரையிலான காலமாகும். மொத்தம் அவர் 16 ஆண்டுகள் 9 மாதங்கள் பிரதமராக இருந்தார். பாஜ தலைமையை பொறுத்தவரை காங்கிரசின் சாதனைகளை முறியடிப்பதே நோக்கமாக கொண்டுள்ளது.

பிரதமர் மோடியை பொறுத்தவரை அவர் 2014ம் ஆண்டு மே 26ம் தேதி முதன்முதலாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். மோடி கடந்தாண்டு ஜூன் 9ம் தேதி மூன்றாவது முறையாக பதவியேற்றார். இந்த பதவி காலத்தை மோடி முழுமையாக நிறைவு செய்தால், அடுத்த பொதுத் தேர்தல் 2029ம் ஆண்டில் நடைபெறும். அப்போது மோடி 15 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெறுவார். ஆனால் நேரு கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்ததால், அடுத்த தேர்தலில் மோடியை நிறுத்தி நேருவின் சாதனையை முறியடிக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* வயதை காட்டி எடியூரப்பாவை பந்தாடிய பாஜ
பாஜவின் 75 வயதில் ஒய்வு மரபால் அண்மையில் பாதிக்கப்பட்டவர் கர்நாடகாவின் முதல்வராக இருந்த எடியூரப்பா. பாஜவின் மூத்த தலைவரான எடியூரப்பாவுக்கென தனி மரியாதை உண்டு. 2021ல் முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு வயது 78. வயதை காட்டி அவரை முதல்வர் பதவியில் இருந்து விலகச் செய்தது பாஜ தலைமை. கண்ணீருடன் பதவி விலகினார் எடியூரப்பா. ஆனால். 2023ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசிடம் படுதோல்வியை சந்தித்தது பாஜ. 2024 மக்களவை தேர்தலில் 11 எம்.பி தொகுதிகளை இழந்தது.

* ‘விதி ஏதும் இல்லை’
மோடியின் ஓய்வு என்பது அரசியல் களத்தில் பேசப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே இந்த பேச்சு எழுந்தபோது, பாஜ தேசிய தலைவராக இரண்டு முறை பணியாற்றிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி ஒன்றில், ‘75 வயதான தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் வகையில், கட்சியில் எந்த விதியும் இல்லை; ஒரு தலைவரின் சேவை என்பது அவரது உடற்தகுதியைப் பொறுத்தது. நான் 2009ம் ஆண்டு பாஜ தலைவராக இருந்தேன்; 2013ம் ஆண்டு மீண்டும் தலைவரானேன். அப்போது எனது வயது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. பாஜவின் கட்சிவிதிகளின்படி வயது வரம்பு என்று தனியாக விதி ஏதுமில்லை’ என்றார்.

The post 75 வயதாகும் மூத்த தலைவர்களுக்கு ஓய்வு; பாஜவின் இரட்டை நிலைப்பாடு: அத்வானி, ஜோஷிக்கு ஒரு நியாயம்; மோடிக்கு பொருந்துமா? appeared first on Dinakaran.

Related Stories: