நாங்கள் பி.டி.உஷா போல் வென்றவர்கள் விஜய் தவழும் குழந்தை: அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சென்னை: சென்னை திரு.வி.க நகர் மண்டலம், மங்களபுரம் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் நேற்று காலை தொடங்கி வைத்தனர். இதில் திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது எனவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஒரு பாடல் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. ‘‘மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே, மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே, எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே, கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே, கருணை தீபம் ஏற்றி வைத்த தெங்கள் நெஞ்சமே’’(நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த பணக்கார குடும்பம் படத்தின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்).

பெண்கள்தான் 2026ம் ஆண்டு திமுக ஆட்சியை தூக்கி பிடிப்பார்கள். இன்று தமிழ்நாடு முதல்வர் எங்கு போனாலும் வரவேற்கக் கூடிய கூட்டம் என்றால் அதில் 80 சதவீதம் பெண்களாகத்தான் உள்ளனர். சக்திமயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்கள். பல கரடுமுரடான பாதைகளை கடந்து வந்தவர்கள். சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு, போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது அவர்களுக்கு, ஆர்ப்பாட்டக் களம் என்றால் என்னவென்று தெரியாது அவர்களுக்கு, பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல் மழை வெள்ளம் போன்றவற்றில் கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு உதவி செய்து அதை போட்டோ எடுத்து பிரசுரம் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாங்கள் பி.டி.உஷா போல் வென்றவர்கள் விஜய் தவழும் குழந்தை: அமைச்சர் சேகர்பாபு பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: