மகளிர் சுய உதவி குழுவினருக்கு இந்தாண்டு ரூ.37,000 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

மகளிர் சுய உதவி குழுவினருக்கு இந்த ஆண்டு ரூ.37 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி கூறினார். சட்டப்பேரவையில் நேற்று திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாத்துக்கு பதில் அளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

திமுக அரசு அமைந்தது முதல், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குழுக்களுக்கு சென்ற ஆண்டு ரூ.35 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது. இந்தாண்டு ரூ.37 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டுகளில், இப்படியாக மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கியிருக்கிறோம்.

கடந்த மார்ச் 8ம் தேதி, உலக மகளிர் தினத்தன்று, நம்முடைய முதல்வர், குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த அடையாள அட்டை மூலம், குழுவினர் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை 100 கி.மீ. தூரம் வரை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். விரைவில் அந்த அனைத்து குழுக்களை சேர்ந்த சகோதரிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மகளிர் சுய உதவி குழுவினருக்கு இந்தாண்டு ரூ.37,000 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: