கோடை வெப்பத்தை சமாளிக்க கைகளில் மருதாணி இட்டு வந்த பள்ளி மாணவ, மாணவிகள்

கரூர், மார்ச் 27: கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் கைகளில் மருதாணி இட்டு வந்தனர். கரூர் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் துவக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது கரூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் தேவையான அளவு குடிநீர் பருக வேண்டும், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு உண்ண வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வெயில் காலங்களில் உடல் வெப்பத்தை தடுக்கும் வழிகளில் மருதாணி இடுவதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இதனை, மாணவ, மாணவிகள் மாதத்துக்கு இரண்டு முறை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உதவியுடன் தங்கள் கைகளில் மருதாணி இட்டு பள்ளிக்கு வந்தனர். மேலும், கோடை காலம் முடியும் வரை மருதாணி இட வேண்டும் எனவும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

The post கோடை வெப்பத்தை சமாளிக்க கைகளில் மருதாணி இட்டு வந்த பள்ளி மாணவ, மாணவிகள் appeared first on Dinakaran.

Related Stories: