கருணை அடிப்படையில் வேலை வழங்காத விவகாரம் செங்கல்பட்டு கலெக்டருக்கு விதிக்கப்பட்ட வாரண்ட் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 26: உயர்நீதிமன்ற உத்தரவின்படி கருணை அடிப்படையில் வேலை வழங்கியதால் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு எதிராக பிறப்பித்த வாரண்ட்டை திரும்ப பெற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைகுன்றம் கிராமத்தில், கிராம உதவியாளராக பணியாற்றிய முனுசாமி என்பவர் கடந்த 2001ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது மகன் ராஜகிரி, கருணை அடிப்படையில் வேலை வழங்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அளித்தார். ஆனால் அந்த மனு பரிசீலக்கப்படவில்லை. இதையடுத்து, தனது மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களில் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ராஜகிரி, 2024ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். ஆனால் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவு எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. வேண்டும் என்று உயர்நீதிமன்ற உத்தரவை மீறவில்லை. இந்த விஷயத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். சில நிர்வாக காரணத்தால் மனுதாரருக்கு பணி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கி மார்ச் 24 உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, மாவட்ட கலெக்டருக்கு எதிரான நீதிமன்ற வாரண்ட உத்தரவை திருப்ப பெறுவதாக தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அடுத்த விசாரணையில் இருந்து நேரில் ஆஜாராவதில் இருந்து கலெக்டருக்கு விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post கருணை அடிப்படையில் வேலை வழங்காத விவகாரம் செங்கல்பட்டு கலெக்டருக்கு விதிக்கப்பட்ட வாரண்ட் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: