தமிழகத்தில் பல இடங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் உக்கிரமாக தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு கோடை காலத்தில் வெப்ப அலைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மதியம் நேரத்தில் உடலை சுட்டெரிக்கும் வகையில் வெப்ப அலைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நாட்டில் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் அதிகரித்து இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் பல இடங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: