நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுக்கு முன்னுரிமை: மீண்டும் மீண்டும் காட்சிகளை படமாக்கியதால் பெரும் இழப்பு.! ஐகோர்ட்டில் தனுஷ்-நயன்தாரா தரப்பு வாதம்

சென்னை: நடிகை நயன்தாராவுக்காக படத்தின் காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுத்ததால் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தனுஷ் தரப்பிலும், படத்தில் இல்லாத காட்சிகளைத்தான் தான் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதாக நயன்தாரா தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம் நடந்தது. நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் 1 கோடி ரூபாய் இழப்பீடு தருமாறு உத்தரவிடக்கோரி நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நயன்தாரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெறவில்லை. அதனால், ஆவணப்படத்தில் அந்த காட்சிகளை பயன்படித்தியதில் தவறில்லை. எனவே, தனுஷ் கேட்ட நஷ்டஈட்டை நாங்கள் தர தேவையில்லை என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்து தனுஷ் தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறாவிட்டாலும் அந்த காட்சிகளை எங்கள் தயாரிப்பு நிறுவனம்தான் காட்சியாக்கியுள்ளது.

எங்கள் முன் அனுமதி இல்லாமல் படத்தின் காட்சிகளை நயன்தாரா பயன்படுத்த முடியாது. இயக்குநர் விக்னேஷ் சிவன், படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை நயன்தாராவை முன்னிறுத்தியே எடுத்துள்ளார். நயன்தாராவின் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக விக்னேஷ் சிவன் பலமுறை ரீடேக் செய்து எடுத்துள்ளார். இதனால், தயாரிப்பாளருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுக்கு முன்னுரிமை: மீண்டும் மீண்டும் காட்சிகளை படமாக்கியதால் பெரும் இழப்பு.! ஐகோர்ட்டில் தனுஷ்-நயன்தாரா தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: