வீட்டில் காஸ் கசிவால் தீ விபத்து: 4 பேருக்கு தீவிர சிகிச்சை

வேளச்சேரி, மார்ச் 6: கோவிலம்பாக்கத்தில் வீட்டில் காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடும்பத்தினர் நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம், காந்திநகர், 15வது தெருவை சேர்ந்தவர் முனுசாமி (75). இவரது மனைவி ராணி (70). இவர்களது மகள் சாந்தி (45), மருமகன் ரகு (48), பேரன் அஜித்குமார் (27). இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். நேற்று காலை ரகு கழிவறைக்குச் சென்றிருந்தார். இதை தொடர்ந்து, ராணி (70) எழுந்தவுடன் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது காஸ் கசிந்து இருந்ததால் திடீரென வெடி சத்தம்போன்று தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த முனுசாமி, ராணி, சாந்தி, அஜித்குமார் ஆகிய நான்கு பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு அலறினர். இவர்களின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டனர்.

பின்னர், அவர்களை கொண்டு சென்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு நான்குபேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேடவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட வீட்டை ஆய்வு செய்தார். மேலும், தடயவியல் துறை உதவி இயக்குநர் ஜெயந்தி விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார். விபத்து நடந்த வீட்டில் மாதிரிகளை சேகரித்தார். வீட்டில் இருந்து ரெகுலேட்டர் டியூப் மற்றும் பால் குண்டா, எரிந்த மாதிரி கண்ணாடி துண்டுகளை சேகரித்து எடுத்து சென்றார். இதன் விரிவான அறிக்கையை மேடவாக்கம் போலீசாரிடம் அளிக்கப்பட்டு அதன் பின் தான் தீப்பிடித்ததற்கான முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

The post வீட்டில் காஸ் கசிவால் தீ விபத்து: 4 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: