சூரிய கூடார உலர்த்தியில் வேளாண் பொருட்களை உலர்த்தி மதிப்பு கூட்டி விற்று லாபம் பெறலாம்

கரூர், பிப். 27: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்தகைய திட்டங்களை வேளாண் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சூரிய கூடார உலர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.

சூரிய கூடார உலர்த்தியில் வேளாண் விளைப் பொருட்களை உலர வைப்பதன் முலம் அவற்றை உலர்த்துவதற்கான கால அளவு, கூலியாட்கள் செலவு, அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு ஆகியவை குறைகிறது. குறிப்பாக, விளைப் பொருட்கள் சுகாதாரமான முறையில இயற்கை தன்மை மாறாமல் உலர்வதால் அவற்றின் தரம் உறுதி செய்யப்படுகிறது.

மேலும், பூஞ்சை காளான் படிவதும் தவிர்க்கப்படுகிறது, குறிப்பாக, சூரிய கூடார உலர்த்தியில் கொப்பரை தேங்காய் பூஞ்சை தொற்றின்றி உலர்வதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் போன்ற வேதிப் பொருட்களின் பயன்பாடுகள் தவிர்க்கப்படுகிறது. மேலும், சூரிய கூடார உலர்த்தியில் கொப்பரை தேங்காய், நிலக்கடலை, வாழை, நெல்லி, முருங்கை இலை, கருவேப்பிலை, பாக்கு, தேயிலை, மிளகாய், இஞ்சி, கிராம்பு போன்றவற்றை சுகாதாரமான முறையில் உலர்த்தி, மதிப்புக் கூட்டி அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம். விவசாயிகளின் தேவைக்கேற்பவும், இட வசதிக்கு ஏற்பவும், சூரிய கூடார உலர்த்திகள் 400 முதல் 1000 சதுர அடி பரப்பளவு வரை அமைத்து தரப்படுகிறது.

சூரிய கூடார உலர்த்தி அமைப்பதற்கு ஏற்படும் செலவில் சிறு, குறு விவசாயிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 60 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ. 3.50 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக 3லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 3.5 ஆண்டுகளில் மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரு. 15.59 லட்சம் மானியத்தில் சூரிய கூடார உலர்த்தி அமைத்து தரப்பட்டுள்து. அந்த வகையில் நேற்று, அரவக்குறிச்சி வட்டாரத்தில் விவசாயி சரஸ்வதி வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ரூ. 3.43 லட்சம் மானியத்துடன் 801 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதே போன்று, கரூர் மாவட்டத்தில் கடந்த 3.5 ஆண்டுகளில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள், வாடகை மையம், சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம், வேளாண் விளை பொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள், சூரிய ஒளி மின்வேலி அமைத்தல், மின் மோட்டார் பம்ப்செட்டுகள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல், இந்த வாடகை நில மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 371 விவசாயிகளுக்கு ரூ.3.31 கோடி மதிப்பில் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த திட்டம் தொடர்பாக முழு விவரங்களைற பெற்று பயனடைய வேளாண்மை பொறியியல் துறையின் கரூர் மாவட்ட வேளர்ணமை பொறியியல் செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் செயல்படும் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வட்டார அளவில் வேளாண்மை பொறியியல் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.

இந்த ஆய்வின் போது, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர்கள் சக்திவேல், காளீஸ்வரி, விவசாய சரஸ்வதி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். சூரிய கூடார உலர்த்தியில் கொப்பரை தேங்காய், நிலக்கடலை, வாழை, நெல்லி, முருங்கை இலை, கருவேப்பிலை, பாக்கு, தேயிலை, மிளகாய், இஞ்சி, கிராம்பு போன்றவற்றை சுகாதாரமான முறையில் உலர்த்தி, மதிப்புக் கூட்டி அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.

The post சூரிய கூடார உலர்த்தியில் வேளாண் பொருட்களை உலர்த்தி மதிப்பு கூட்டி விற்று லாபம் பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: