மாதிரி நீதிமன்ற போட்டியில் ராமநாதபுரம் சட்டக்கல்லூரி மாணவர்கள் முதலிடம்

திருப்போரூர்: சென்னை கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், இரண்டாம் ஆண்டாக தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி கடந்த 21ம்தேதி தொடங்கியது. தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் ஜெயகவுரி வரவேற்றார். மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வைத்தியநாதன் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கான மாதிரி நீதிமன்ற போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்த, போட்டிகளில் ஒரு கல்லூரிக்கு ஒரு குழு வீதம் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 24 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் வழக்குகளை நடத்திக் காட்டினர். ஒவ்வொரு குழுவினரும், வாதி, எதிர்வாதியாக வாதாடினர். மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் நீதிபதிகளாக இருந்து, மாணவர்களின் குழுக்களுக்கு, மதிப்பெண் வழங்கினர். ஒரு கல்லூரிக்கு ஒரு குழு வீதம் மொத்தம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இப்போட்டிகளின் இறுதிச்சுற்றில் ராமநாதபுரம் அரசு சட்டகல்லூரியும், நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியும் கலந்துகொண்டு வாதிட்டனர். இந்த, போட்டியில் ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லுாரி, அதிக மதிப்பெண் பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

மேலும், சிறந்த பெண் வாதுரையாளராக ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி மாணவி பர்ஹானாவும், சிறந்த ஆண் வாதுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர் ஆல்பர்ட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த வாதுரையாளராக நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சவுந்தர் பரிசுகளையும், கோப்பையையும் வழங்கினார். பங்கேற்ற அனைத்து சட்டக்கல்லூரி மாணவர் குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி, மாவட்ட நீதிபதி ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

The post மாதிரி நீதிமன்ற போட்டியில் ராமநாதபுரம் சட்டக்கல்லூரி மாணவர்கள் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: