ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து மாநில அளவிலும் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன்படி 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இறுதி முழு பட்ஜெட் என்பதால் இதை அரசு மிக முக்கிய பட்ஜெட்டாக கருதுகிறது. எனவே மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள், மக்களால் ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் போன்ற அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சட்டசபை கூடிய முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இந்த சூழலில் பட்ஜெட்டில் மக்களின் விருப்பங்களை இடம் பெறச் செய்யும் வகையில் பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு முன்பதாக அரசுத் துறைகள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள், சங்கங்களுடன் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் இன்று 18-ம் தேதி தலைமை செயலகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து 3 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இன்று ஊரக வளர்ச்சி துறை, மக்கள் நல்வாழ்வுதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நாளை 19-ம் தேதி வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளுடனும், 20-ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தின் மூலம் துறை சார்ந்த தேவைகளும், எதிர்பார்ப்புகளும் என்னென்ன என்பது விரிவாக தெரியவரும் என்றும், இதன் அடிப்படையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொடர்பாக இன்று முதல் 3 நாட்கள் கருத்துக்கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.