புற்று நோய் பாதிப்பு காரணமாக வாய், மூக்கில் ரத்தம் வழிந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு: காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் பரபரப்பு

வேளச்சேரி, பிப்.8: புற்று நோய் பாதிப்பு காரணமாக வாய், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில், 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம், காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. கோட்டூர்புரம், ஜிப்சி காலனியை சேர்ந்தவர் ரேகா (37). நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இவர், தனது மகன் சக்திவேல் (10) என்பவருடன், நேற்று முன்தினம் அடையாறு காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். அப்போது, திடீரென சிறுவன் சக்திவேலுக்கு வாய் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த தாய் ரேகா, உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த மகனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு, சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனை சார்பில் இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், சிறுவன் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சக்திவேல், கடந்த ஒரு வருடமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது, மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புற்று நோய் பாதிப்பு காரணமாக வாய், மூக்கில் ரத்தம் வழிந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு: காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: