அறநிலையத்துறை இடத்தை அபகரிக்கும் நோக்கில் கோயில் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 21 கிரவுண்ட் இடம், கோயில் எதிரில் உள்ளது. இதை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022ம் ஆண்டு ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு இடம் மீட்கப்பட்டது. அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கோயில் பணியாளர்கள் நந்தகுமார், பார்த்திபன், முத்தமிழ் செல்வி உள்ளிட்ட பணியாளர்கள் நேற்று இந்த பணிகளை பார்வையிட்ட போது, அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சதீஷ் மற்றும் முருகன் உள்ளிட்டோர் கோயில் பணியாளர்களை மிரட்டி, இந்த இடத்தை சுத்தம் செய்யக்கூடாது, என எச்சரித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட இடத்தில் ஷீட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து ரவீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவை சேர்ந்த சதீஷ் (33) என்பவரை நேற்று கைது செய்தனர். முருகன் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.

The post அறநிலையத்துறை இடத்தை அபகரிக்கும் நோக்கில் கோயில் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: