₹3 லட்சம் மானியத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க கூட்டுறவுத்துறை அழைப்பு

வேலூர், ஜன.26: வேலூர் மாவட்டத்தில் ₹3 லட்சம் மானியத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை தெரிவித்துள்ளார். வேலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இவ்வாறு முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோருக்கு ₹3 லட்சம் மானியமாக வழங்கப்படும். இதில் ₹1.50 லட்சம் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், மீதமுள்ள தொகை ₹1.50 லட்சம் மருந்துகளாகவும் வழங்கப்படும். எனவே, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்/டிபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ₹3 லட்சம் மானியத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க கூட்டுறவுத்துறை அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: