சுரண்டை அருகே அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்தவர் கைது

சுரண்டை,ஜன.11: தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டையில் இருந்து பூபாண்டியாபுரம் கிராமம் செல்லும் வழியில் டைல்ஸ் தயாரிக்கும் குடோன் என்ற பெயரில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிப்பதாக சுரண்டை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அனுமதி பெறாமல் பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து அங்கு இருந்த சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த சுடலைமாடன் மகன் முருகன் (52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து வீ.கே.புதூர் தாசில்தார் சுடலைமணி பட்டாசு தயாரித்த குடோனை ஆய்வு செய்தார். அனுமதி இல்லாமல் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சம்பவம் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சுரண்டை அருகே அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: