சிவராஜ்சிங் சவுகான் மகன் மிரட்டல் இடைத்தேர்தலில் காங். வென்றால் தொகுதியில் ஒரு வேலை நடக்காது: அறிவுரை கூறிய திக்விஜய்சிங்

போபால்: மபியில் இடைத்தேர்தல் நடக்கும் புத்னி தொகுதியில் காங்கிரஸ் வென்றால் ஒரு நலத்திட்ட பணிக்கான செங்கல் கூட வைக்கப்படாது என பேசிய முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மகனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் புத்திமதி கூறி உள்ளார். மத்திய பிரதேசத முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். 2024 மக்களவை தேர்தலில் இவர் வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சரானதைத் தொடர்ந்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவரது புத்னி தொகுதியில் அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இதில், பாஜ வேட்பாளரை ஆதரித்து சிவராஜ் சிங் மகன் கார்த்திகே பிரசாரம் செய்த போது, ‘‘ஒருவேளை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நீங்கள் எப்படி தொகுதிப் பிரச்னைக்காக அரசை அணுகுவீர்கள்? கிராம தலைவரால் எப்படி பணிகளை செய்ய முடியும். அப்புறம் ஒரு செங்கல் கூட நடப்படாது’’ என்றார். இந்த வீடியோ வைரலான நிலையில் கார்த்திகேவுக்கு தனது எக்ஸ் பதிவில் அறிவுரை கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், ‘‘நான் 10 ஆண்டாக முதல்வராக இருந்துள்ளேன். இப்படி எல்லாம் நானே பேசியது கிடையாது. உங்களை என் பேரன் போல் நினைத்து கூறுகிறேன். இனியும் இப்படி பேசாதீர்கள். உங்கள் அப்பா கூட இதுபோன்ற பேசியது கிடையாது. இது தவறான பேச்சு என்பதற்கு அவரே சாட்சி’’ என கூறி உள்ளார்.

The post சிவராஜ்சிங் சவுகான் மகன் மிரட்டல் இடைத்தேர்தலில் காங். வென்றால் தொகுதியில் ஒரு வேலை நடக்காது: அறிவுரை கூறிய திக்விஜய்சிங் appeared first on Dinakaran.

Related Stories: