கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட தேசிய தேர்வு முகமை மாஜி இயக்குனருக்கு மீண்டும் புதிய பதவி: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமையின் முன்னாள் இயக்குநர் சுபோத்குமார் சிங்கிற்கு மீண்டும் புதிய பதவியை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை இயக்குநராக இருந்தவர் சுபோத்குமார் சிங். இவர் சட்டீஸ்கர் மாநில கேடர் ஐஏஎஸ் அதிகாரி. இவரது பதவிக்காலத்தில் நீட், நெட் கேள்வித்தாள்கள் அடுத்தடுத்து வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து ஜுன் 22ம் தேதி அவர் தேசிய தேர்வு முகமை இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு எஃகு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், நிதி ஆலோசகராகவும் ஒன்றிய அரசு புதிய பதவியை வழங்கி உள்ளது. அதே போல் டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி பி கிருஷ்ணமூர்த்தி, மருந்துத் துறையின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவராக மூத்த அதிகாரி விபின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். துணை தேர்தல் ஆணையர் நித்தேஷ் குமார் வியாஸ் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட தேசிய தேர்வு முகமை மாஜி இயக்குனருக்கு மீண்டும் புதிய பதவி: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: