பாலியல் தொழில் செய்வதாக மிரட்டி மசாஜ் சென்டரில் பணியாற்றும் இளம் தெரப்பிஸ்ட் பலாத்காரம்: ஆயுதப்படை காவலர் அதிரடி கைது

பூந்தமல்லி: மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ராணி (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ேநற்று முன்தினம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: மதுரவாயல் பகுதியை சேர்ந்த ராணி, மதுரவாயல் மற்றும் சுற்றியுள்ள மசாஜ் சென்டர்களில் தெரப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி மாலை, இவர் தனது கணவருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ராணிக்கு பழக்கமான இளம்பெண் ஒருவருடன், காவல்துறை சீருடையில் முகக்கவசம் அணிந்தவர் வந்துள்ளார். பழக்கமான பெண் என்பதால் ராணி, தனது வீட்டிற்குள் அழைத்து பேசியுள்ளார். அப்போது சீருடையில் இருந்த நபர், உடன் வந்த பெண்ணை வெளியில் அனுப்பியுள்ளார்.

பின்னர், ராணியிடம் ‘நான் விபசார தடுப்பு பிரிவு காவலர். நீங்கள் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக எங்களுக்கு ஆதாரங்களுடன் புகார் வந்துள்ளது, என கூறியுள்ளார். அதற்கு ராணி ‘சார் நான் முறையாக தெரப்பிஸ்ட் பயிற்சி முடித்து, மசாஜ் சென்டர்களில் பணியாற்றும் பெண்களுக்கு தெரப்பிஸ்ட் பயிற்சி அளித்து வருகிறேன். என் மீது இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சொல்றீங்களே,’ என்று அழுதுள்ளார். அதற்கு அந்த காவலர், ‘உன்னை கைது செய்ய தான் நான் வந்து இருக்கிறேன்.

பின்னர், ‘உன்னை கைது செய்யாமல் இருக்க ரூ.1 லட்சம் கொடு. இல்லை என்றால் கைது செய்வது உறுதி,’ என்று மிரட்டியுள்ளார். நாங்கள் மரியாதையாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். எங்களை பாலியல் தொழில் செய்ததாக கைது செய்தால், நாங்கள் இந்த ஊரில் எப்படி நடமாட முடியும் என்று காவலரிடம் கெஞ்சியுள்ளனர். ஒரு கட்டத்தில், வேறு வழியின்றி ராணி வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை காவலரிடம் கொடுத்துள்ளார். அதற்கு காவலர், ‘ரூ.1 லட்சம் கொடுத்தால் இங்கிருந்து செல்கிறேன். இல்லை என்றால் கைது செய்வேன்,’ என்று கூறியுள்ளார்.

பிறகு ராணியின் கணவர் ‘எனது வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் இருக்கிறது. அதை உங்களுக்கு கூகுள்-பே மூலம் அனுப்பி விடவா,’ என்று கேட்டுள்ளார். அதற்கு காவலர், ‘அப்படி எனக்கு அனுப்ப கூடாது. வேண்டும் என்றால் நீ அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை எடுத்து கொண்டு வா,’ என்று கூறியுள்ளார். அதன்படி ராணியின் கணவர் வெளியே சென்றதும், காவலர், ‘‘தற்போது நீங்கள் கொடுக்கும் ரூ.65 ஆயிரத்தை வாங்கி செல்கிறேன். மீதமுள்ள ரூ.35 ஆயிரத்தை பிறகு வாங்கி கொள்ள வேண்டும் என்றால், என்னுடன் நீ இப்போதே ஒன்றாக இருக்க வேண்டும்,’ என்று ராணியை மிரட்டியுள்ளார்.

அதற்கு ராணி மறுப்பு தெரிவித்து அழுதுள்ளார். உடனே காவலர், நான் சொல்வதை கேட்க மாட்டியா என ஆபாசமாக பேசி, வீட்டின் படுக்கை அறைக்கு ராணியை இழுத்துச் சென்று, ராணியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை விபசார வழக்கில் கைது செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஏடிஎம் மையத்திற்கு சென்று திரும்பிய ராணியின் கணவரிடம் ரூ.15 ஆயிரத்தை பெற்று கொண்டு, மீதமுள்ள பணத்தை பிறகு வந்து வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு காவலர் சென்றுவிட்டார். அப்போது ராணியின் முகம் மற்றும் உடலில் சிறு காயங்கள் இருந்ததால் இதுபற்றி அவர் கேட்டுள்ளார்.

அப்போது நடந்த சம்பவத்தை கூறி ராணி அழுதுள்ளார். இதை கேட்ட அவரது கணவர், போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். ஆனால், அந்த காவலர் பாலியல் தொழில் செய்வதாக பொய் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதால், பயந்து அவர் மீது புகார் ஏதும் கொடுக்காமல் இருந்துள்ளார். பணத்தை பெற்று சென்ற காவலர் அடிக்கடி ராணிக்கு போன் செய்து, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும், மீதமுள்ள பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டி வந்துள்ளார். அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், வேறு வழியின்றி காவலர் மீது ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த புகாரின் படி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மதுரவாயல் பகுதியில் ராணி வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்த, திருச்சியை சேர்ந்த பவுஷா (28) என்பதும், இவர் லாட்ஜ் மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சென்று, பாலியல் தொழில் செய்வதாக புகார் வந்துள்ளது, என கூறி பணம் பறித்ததாக வடபழனி மற்றும் திருவான்மியூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டவர் என்பதும், காவல்துறையில் ஒழுங்கினமாக நடந்து கொண்டதால், உயர் அதிகாரிகள் பவுஷாவை சஸ்பெண்ட் செய்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆயுதப்படை காவலர் பவுஷாவை அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

The post பாலியல் தொழில் செய்வதாக மிரட்டி மசாஜ் சென்டரில் பணியாற்றும் இளம் தெரப்பிஸ்ட் பலாத்காரம்: ஆயுதப்படை காவலர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: