காதலன் பிரிந்து சென்றதால் விரக்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு திருநங்கை தற்கொலை: மாங்காடு போலீசார் விசாரணை

குன்றத்தூர்: மாங்காடு அருகே காதலன் பிரிந்து சென்றதால், விரக்தியடைந்த திருநங்கை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாங்காடு அடுத்து மவுலிவாக்கம் பிரதான சாலை, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சரண் (எ) இசை (24). திருநங்கையான இவர், கோடம்பாக்கத்தை சேர்ந்த கரண் (21) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். காதலர்களான 2 பேரும் இசையின் வீட்டில் கணவன் – மனைவி போல் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் கரண் தனது பெற்றோருடன் செல்வதாகக்கூறி, திருநங்கை இசையை தனியே தவிக்கவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.

காதலன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் கடந்த சில தினங்களாக கடும் மனஉளைச்சலில் இருந்த இசை, நேற்று அதிகாலை 3 மணியளவில் அதிகமாக மது அருந்திவிட்டு, தனது காதலன் பிரிந்து சென்றதால் தான் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு, அதன்படியே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திருநங்கை இசையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post காதலன் பிரிந்து சென்றதால் விரக்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு திருநங்கை தற்கொலை: மாங்காடு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: