இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் சென்னை வாலிபர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் இருந்து கருங்காலிகுப்பம், மாதபூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இரவில் செல்லும் கடைசி பஸ் சென்ற பின், அந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ஷேர் ஆட்டோக்களில் செல்வது வழக்கம். அதன்படி நேற்றிரவு ஒரு ஷேர் ஆட்டோவில் இளம்பெண் மற்றும் 2 வாலிபர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ சென்றது.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்களும் திடீரென இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். சத்தம்கேட்டு திரும்பிய டிரைவர் ஆட்டோவை நிறுத்தி தட்டிக்கேட்டார். ஆனால் அந்த வாலிபர்கள் ஆட்டோ டிரைவரையும் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் டிரைவரும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் கை, கால்களை கட்டி ஆட்டோவில் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அந்த வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த சுரேஷ்(34), கீழ்பென்னாத்தூரை சேர்ந்த மணிகண்டன்(40) என தெரியவந்தது.

இவர்கள் இருவரும் ஒன்றாக சென்னையில் பணிபுரிந்து வருவதாகவும், நேற்றிரவு சுரேஷ், மணிகண்டன் இருவரும் மாதப்பூண்டிக்கு ஆட்டோவில் வந்தபோது இவ்வாறு நடந்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் சென்னை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: