சிவகாசிக்கு பட்டாசு வாங்க வேனில் சென்ற தனியார் கம்பெனி மேலாளரை கத்தியால் குத்தி ₹10 லட்சம் அபேஸ்

*பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர் : சிவகாசிக்கு பட்டாசு கொள்முதல் செய்வதற்காக வேனில் சென்ற தனியார் கம்பெனி மேலாளரை 6 பேர் வழிமறித்து கத்தியால் குத்தி ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரம்பலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம் மொரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (41). சென்னை பாரிஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வரும் இவர், கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு தீபாவளி பட்டாசு கொடுப்பதற்காக சிவகாசியில் பட்டாசு கொள்முதல் செய்வதற்காக வேனில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் புறப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது 2 பைக்குகளில் வந்த 6 மர்ம நபர்கள், யுவராஜ் வந்த வேனை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். அவரிடம் ஏதோ ஒருவர் முகவரி கேட்பதுபோல் அருகில் சென்று யுவராஜை வேனிலிருந்து கீழே இறக்கி, கத்தியால் குத்தி ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை பறித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த யுவராஜ், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து யுவராஜிடம் விசாரணை நடத்தியதில், பைக்குகளில் வந்தவர்கள் வேனை ஓரமாக நிறுத்தும் படி சைகை கூறியதால் வேன் நிறுத்தப்பட்டதும், உதவி கேட்பதுபோல் அருகே வந்தவர்கள் அவரை தாக்கி பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுபற்றி போலீசார் கூறுகையில்,இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா என யுவராஜை ஏற்றிக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து சென்றோம்.

ஆனால் யுவராஜ் நள்ளிரவில் சம்பவம் நடந்த இடம் தனக்கு தெளிவாக அடையாளம் தெரிய வில்லை, குறிப்பிட்ட இந்த பகுதியில் தான் நடந்தது போல் தெரிகிறது எனக கூறி, தண்ணீர் பந்தல் பகுதியை அடையாளம் காட்டினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் நடந்த சம்பவம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். கம்பெனிக்கு தெரியாமல் பணத்தை அபேஸ் செய்ய யுவராஜ் நாடகமாடுகிறாரா என்கிற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

The post சிவகாசிக்கு பட்டாசு வாங்க வேனில் சென்ற தனியார் கம்பெனி மேலாளரை கத்தியால் குத்தி ₹10 லட்சம் அபேஸ் appeared first on Dinakaran.

Related Stories: