விஷம் வைத்து தெரு நாய்களை கொன்றவர் கைது

பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த பெருமாளகரம் புளூட்டோ தெருவை சேர்ந்தவர் மோகன்(53). இவரது வீட்டில் தெரு நாய்கள் சிலவற்றை வைத்து வளர்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசித்து வந்தவர் பாலாஜி வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மோகன் வளர்த்து வந்த தெரு நாய்கள் சேர்ந்து பாலாஜி வளர்த்து வந்த வளர்ப்பு நாயை கடித்து கொன்று விட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி நேற்று முன்தினம் இரவு உணவில் எலி மருந்தை கலந்து தெரு நாய்களுக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட இரு தெருநாய்கள் இறந்துவிட்டன. இது குறித்து மோகன் திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொல்லப்பட்ட இரண்டு நாய்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேப்பேரியில் உள்ள கால்நடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலாஜியை திருவேற்காடு போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஷம் வைத்து தெரு நாய்களை கொன்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: