குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு

மதுரை : குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய வழக்குகளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்னன் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார். கடந்த மாத விசாரணையின் போது, “தமிழகத்தில் விசாரணை நீதிமன்றங்களில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ளது, இவ்வாறு இருந்தால் நீதிபரிபாலனை பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு உடனடியாக கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும், ” என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் 14 அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலியாக உள்ள குற்றவியல் துறை துணை இயக்குநருக்கான 5 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என்ற அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை பரிசீலித்த நீதிபதி, “சிறப்பு கவனம் எடுத்து அரசிடம் தெரிவித்து நீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த இயக்குனரும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருமான அசன் முகமது ஜின்னாவுக்கு பாராட்டு தெரிவித்தார். அத்துடன் குறுகிய காலத்திற்குள் காலியாக உள்ள குற்றவியல் வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுத்த அரசுக்கும் ஐகோர்ட் பாராட்டு தெரிவித்தது. இதையடுத்து, துணை இயக்குநர் பதவி உயர்வால் ஏற்படும் பணியிடங்களை நிரப்ப அரசின் அறிவுரை பெற்று தெரிவிக்க ஐகோர்ட் ஆணையிட்டது.

The post குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: